Monday, February 14, 2011

ஆடு அறுக்க முன்னரே அடுப்பிலே சட்டி வைக்கலாமா மேன்மை தங்கிய ஷோபா சக்தி?

நான் நினைத்ததுபோலவே, ஷோபாசக்தி என்னையும் போகின்றபோக்கில் இழுத்திருக்கின்றார். அதாவது..."இதே வேண்டுகோளை முன்னர் XXXXமும் டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன். ". (http://www.facebook.com/notes/shoba-sakthi/valarmatikku-en-sopa-patil-colvatillai/499180577910 and I was tagged by shoba) உண்மையில் எனக்குச் ஷோபாவிடம் கேள்வி கேட்கவேண்டுமென்கின்ற முற்பிறப்பின் பயன் ஏதுமில்லை.அவ்வாறு கேட்காமல் தூங்கினால் எனக்கு நித்திரை வராமற்போகும் என்பதுமில்லை. அதுபோல என் கேள்விகளை காணாவிட்டால் ஷோபாவுக்கு இந்தியாவிற்கான பிளைட் ரிக்கேட் கொடுக்கமாட்டார்கள் என்பதுமில்லை. பிறகேன் அவர் என்னை வம்புக்கு இழுக்கிறார்?)



இப்போது பிளாஷ்பேக்...

இலங்கை சர்வதேச மாநாட்டை ஒட்டி அறிக்கைகள் அறம்புறமாய்த் திரிந்துகொண்டிருந்த அலுப்பில் 'அறிக்கை எத்தனை அரிக்கையடா' என எனக்கு அட்டமத்துச்சனி வந்துநின்ற பொழுதில் எழுதப்போக அது நீண்டு நான் 'ஷோபாவிற்கான பின்னூட்டம்' என இதை (http://www.facebook.com/notes/dse-tamilan/sopavirku-elutiya-pinnuttam/169903003037863) எழுதவேண்டிவந்தது. அதில் முதற்கேள்வியாக ஷோபா முன்வைத்த ..."Shoba Sakthi :சரி நண்பா நீங்கள் இங்கே வைத்துள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவோம். நான் பதில் சொவல்வதில்லை என்ற விசயம் குறித்தும் பேசுவோம். முதலில் நீங்கள் கொழும்பில் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஏனெனில் விவாதம் இதைக் குறித்ததுதானே! பின்பு மிகுதி நியாயத்தைப் பேசுவோம்." என்பதை ஒரு சவாலாக எடுத்து நானும் என் கை அரிக்க அரிக்க ஒரு 'அரிக்கையை' எழுதினேன் (http://www.facebook.com/notes/dse-tamilan/marrai-munvaittal/170262303001933). அதற்கு முதற்கையெழுத்தாக ஷோபாவும் இடுவதாகக் கூறியது ஓரு நினைவூட்டல். பிறகு இருவரும் மவுனத்தால் 'பகை மறப்பு'ச் செய்திருந்தோம்.



அதேசமயம், 'ஷோபாவிற்கான பின்னூட்டம்' கட்டுரையில் ஒரு விவாதம் நண்பர்களிடையே போனது. எனது நேரமின்மை மற்றும் அக்கறையுமின்மை காரணமாக நான் அங்கு பங்குபெறவில்லை. ஆகவேதான் ஒரு பின்னூட்டம் கூட அந்தப் பதிவில் எழுதவில்லை. எனினும் ஷோபாவின் நளினமான உரையாடல் திறமை தெரியும் என்பதால் (இவ்வளவு காலம் ஷோபாவைப் பார்க்கிறேன். அதுகூடத் தெரியாதா என்ன?) இவ்வாறு அந்தக்கட்டுரையின் இறுதியில் எழுதினேன்..."எனக்குத் தெரியும் இதற்கும் நீங்கள் வெட்டி ஒட்டிக் கேள்வி கேட்பீர்கள் என்று. பரவாயில்லை. ஆனால் எனக்கு உடனே பதில் சொல்ல முடியுமோ தெரியவில்லை. அவ்வாறு எதுவும் எழுதாவிட்டால் 'காணாமற்போய்விட்டான்/ தலைமறைவாகிவிட்டான்' என யமுனாவிற்குச் செய்ததைப் போல மட்டும் செய்துவிடாதீர்கள், நேரம் வாய்க்கும்போது அதற்கும் பதில் சொல்வேன்"



நான் முன்னர் எச்சரிக்கையாக எழுதியது இப்போது நிகழ்ந்திருக்கின்றது. 'டிசேயிடம் கேட்டேன், அவர் அதைச் செய்யவில்லை' என்கின்றார் ஷோபா. ஆக, இதன் மறைபொருள் நான் தெகிரியமாகச் சிங்கிள் சிங்கமாய் நின்று கேட்டும் டிசே போன்ற தூசிகள் எல்லாம் பயத்தில் ஓடிவிட்டாங்கள் எனவும் விரும்பினால் வாசிக்கலாம். உண்மையில் அந்த உரையாடலைத் தொடர விருப்பமில்லை. எனெனில் ஷோபா குறுக்குமறுக்குமாய் மறித்து தாச்சி விளையாடி... எப்படி என்றால் ஆவது அளாப்பி 'சிங்கம் வென்றது' என்று மார்தட்டுவார் எனபது நன்கு தெரியும். தோல்விதான் என ஏற்கனவே தெரிந்த முடிவுக்காய், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பாதையில் போய் என்ன பிரயோசனம்? நான் என்ன கைப்புள்ளயா என்ன? வடிவேலுக்காவது அடிவாங்குகிற அளவுக்கு படங்களில் காசு கொடுகின்றனர். நான் இப்படி அடிவாங்க ஷோபாவா எனக்கு காசு அனுப்புவார்?



இந்தாருங்கள் ஷோபா உங்களுக்கு வெற்றி என அவருக்குக்கேடயத்தை இப்போதே மனமுவந்து கொடுத்துவிடுகின்றேன். ஏன் கிண்ணத்துக்குப் பதிலாய் கேடயம் கொடுக்கின்றேன் என்றால் ஷோபா ஒரு சிங்கம். அவருக்கு கேடயம் கொடுத்தால் அதைக் கவசமாய் நெஞ்சில் அணிந்துகொண்டு அடுத்த போர்க்களத்துக்குச் சென்று வெற்றி வாகை சூடுவார். அந்தப் பெருமிதத்ததால் என்னை மாதிரியான கைப்புள்ளகளையும் மறந்துவிடுவார். நானும் என்பாட்டில் நிம்மதியாக இருக்கலாம்.



இவ்வாறுதான் சற்றுமுன்னர்வரை இருந்தேன். இருந்தும் ஒரேயொரு கவலைமட்டும் வந்தது. நாளை நான் மண்டையை போடும்போது ஷோபாவோ அல்லது அவரது இரசிகர்களோ என் கல்லறைக்கு முன் நின்று, கேளடா கேளடா என ஷோபாசக்தி நெஞ்சை நிமிர்த்திக் கேட்டும், இவன் ஷோபாவிடம் கேள்வி கேட்காது தப்பியோடிய கோழை' எனச் சபிக்கமாட்டார்களா என்ன? (புனை)பெயரிலை 'தமிழன்' என்ற பெயரை வைத்துக்கொண்டு 'கோழை'யாய்ச் செத்தால் அது முழுத்தமிழ் இனத்துக்குமே அவமானம் அல்லவா?



ஆகவே சில கேள்விகளை சும்மா ஒப்புக்காய் எழுதிவிடுகின்றேன். தயவுசெய்து இனிவருங்காலங்களில் ஷோபா, 'இதே வேண்டுகோளை முன்னர் XXXXXமும் டிசேயிடமும் வைத்தேன் ' என்று சொல்கின்றபோது எனது பெயரை அகற்றி பெரும் வரலாற்றுக் கறையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேண்டுமானால், இதே வேண்டுகோளை முன்னர் டிசேயிடம் வைத்தேன். அவர் ஒரு வாலிழந்த பல்லிபோலக் கேள்விகள் கேட்டார். நான் செத்த பாம்புக்கு அடிகின்றமாதிரி அவரது கேள்விகளுக்குச் சுழன்று சுழன்று பதில் அளித்து சும்மா தூவென எல்லாவற்றையும் ஊதித்தள்ளிவிட்டேன்' என எழுதவேண்டுமென இறைஞ்சிக் கேட்கின்றேன்.. 'நான் யார் வாத்தியாரின் இரசிகன்' என்று ஷோபா முடிவுரை எழுதும் சந்தர்ப்பம் வந்தால், டிசே அசினின் அடிமை' எனத் குறிப்பிடவும் தயவுசெய்து மறக்கவேண்டாம்.



இனிச் சும்மா வரலாற்றுப் பழியிலிருந்து தப்புவதற்காய் சும்மா சாட்டுக் கேள்விகள்...

(ஸ்டார்ட்டு மியூசிக்...இப்போது ஷோபா தன் ஆட்டத்தை ஆடுவார்...)





(1) எக்ஸிலில் வந்த விளம்பரங்களைக் கண்டித்து 'அறம்' பாடிய நீங்கள், எந்த 'அறத்தின்பாற்பட்டு' பெருநிறுவனங்கள் நடத்தும் தீராநதி, இந்தியா ரூடே, விகடன் போன்றவற்றிற்கு பேட்டி கொடுத்தீர்கள்/எழுதச் செய்தீர்கள்?

(மேலதிக விளக்கம்: கற்சுறாவின் ஃபேஸ்புக்கில் உள்ளது)



(2) வால்பாறையில் நடந்த கூட்டத்தில் ம.மதிவண்ணன் தலித் என்பதற்காய் அவமானப்பட்டதை சுகிர்தராணி இங்கே (http://padamkadal.blogspot.com/2009/08/blog-post_12.html) பதிவு செய்திருக்கின்றார். நானறிந்தவரை அந்நிகழ்வில் பங்குபற்றிய அ.மார்க்ஸோ அல்லது நமது புகலிட 'தலித்தியத்தோழர்' சுகனோ இது குறித்து எதையும் பதிவு செய்ததாக அறியவில்லை? இவை குறித்து விரிவாக அறிந்திருக்கக்கூடிய 'தலித்தியப் போராளியான' நீங்கள் இதைப் பற்றியும் எங்கும் பதிவு செய்ததாகவும் இல்லை. அது ஏன்? காலம் கடந்தபின்பாயினும் சுகிர்தராணியின் கட்டுரைக்கான உங்கள் பதில் என்ன?



(3) அருந்ததிரோய் உயிர்மை கொடுத்த முற்பணத்தைத் திரும்பிக்கொடுக்கவில்லை என்பதற்காய் ஒரு ஸ்டேட்டஸ் செய்தி விடுகின்றீர்கள். நல்ல விடயமே. நமக்கான சார்புகளைத்தாண்டி பாதிக்கப்பட்டவருக்காய் நாம் குரல் எழுப்பவேண்டுந்தான். ஆனால் இதே உயிர்மைதான் மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு' விடயத்தில் தம் வியாபார முகத்தைக் காட்டியது என 2-3 மூன்று இடங்களில் பதிவு செய்திருந்தேன். அண்மையில் கருணாகரனுக்குக் கூட அதே பதிலைக் கூறியிருந்தேன். அந்த விடயத்துக்கு ஏன் எதுவுமே கூறவில்லை? அருந்ததிரோய் ரேஞ்சில் மட்டுந்தான் பேசுவீர்களா? என் பல்லி மூளையோ, எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என சொல்கிறது. அஃது உண்மைதானா?



(4) 50, 000 ரூபாயை அருந்ததி ரோய் திரும்பிக்கொடுக்காமல் இருப்பது 'நேர்மையற்றது' என்கின்ற முடிவுக்கு வருகின்றீர்கள். நல்லதே. உங்களிடம் இன்னுமிரு நண்பர்களிடமும் தமிழகத்தில் இருந்து X எனும் நண்பர் 50 நூற்களை விமானத்தில் அனுப்பி வைக்கின்றார். அந்நூலின் விலை கனடாவிலேயே 30 டொலருக்குத்தான் விற்கப்படுகின்றது. ஆக 50 * 30 = 1500 டொலர்ஸ் + விமானச் செலவு. ஒரு கனடியன் டொலர் = 40 இந்திய ரூபாய் என்றாலே. அனுப்பிய புத்தகங்கள் மட்டுமே

60, 000 ரூபாய் வரும். விமானச் செலவை விடுவோம். அவை தடிமனான புத்தகங்கள். அந்த எக்ஸ் நண்பர் நீங்கள் அந்தச் செலவை அனுப்பவில்லை என என்னிடம் நேரடியாகச் சொன்னார். உங்களிடம் கேட்டால், அந்த நூலை எழுதியவர் எமது 'வளர்ப்புத் தந்தை' போன்றவர் எனக் கூறி தப்பிவிடுகின்றீர்கள் என்றும் கூறுகின்றார். (வாசிக்கும் மற்றவர்களுக்கு சார்பு நிலை வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காய்..., இதைச் சொன்னவர் வளர்மதி இல்லை எனவும் கூறிவிடுகின்றேன்). ஆக, 50, 000 ரூபாய் நீங்கள் அந்த நண்பருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறதல்லவா? அருந்ததிரோயின் நேர்மையற்றதனத்தைக் கண்டிக்கும் நீங்கள் இதுகுறித்து ஏன் உங்கள் மனச்சாட்சியின் நேர்மையைக் கேள்விகேட்கவில்லையா?



(5) கறுப்பு தொகுப்பில் அலன் சோகலின் மோசடிக் கட்டுரையைப் பிரசுரித்திருக்கின்றீர்கள். அது குறித்து வெளிப்படையாக நீங்கள் எழுதியிருக்கின்றீர்களா? 'கறுப்பு' வாங்கி வாசிக்கும் வாசகர்களிடம் இதற்காய் மன்னிப்புக் கேட்டிருக்கின்றீர்களா? (இதேயிடத்தில் ஒன்றைக் கூறவேண்டும், இந்தக் கட்டுரையை மட்டும் வைத்து உங்களோடும் அ.மார்க்சோடும் இருக்கும் பகையால் காலச்சுவடு கண்ணன் முழுத்தொகுப்பை நிராகரித்தபோது, ரோசாவசந்த், திண்ணைதூங்கி உட்பட நான் வரை உங்களுக்கு ஆதரவாகவே பதிவுகள் தளத்தில் பேசினோம் என்பதையும் ஒருகுறிப்புக்காய் கூறிக்கொள்கிறேன்)



(6) சனதருமபோதினியில் சாருவின் 'உன்னதசங்கீதம்' எந்த அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டது? தொகுப்பாளர் என்றவகையில் அந்தக் கதை குறித்து உங்களுக்கு என்ன அபிப்பிராயம் உண்டு?



(7) இன்று இலங்கையில் நடைபெறும் சர்வதேச இலங்கை எழுத்தாளர் மாநாடு, காலி எழுத்தாளர் மாநாடு என எல்லாவற்றுக்கும் ஓடி ஓடிப்போய் கையெழுத்து இடுகின்றீர்கள். நண்பர்களுக்கு அனுப்பி ஆதரவும் கேட்கின்றீர்கள். உங்களது அரசியலைத் தெளிவாக வைப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. எனது கேள்வி என்னவென்றால் ஒரு பேச்சுக்கு இலங்கை அரசுக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் போரில் வெற்றி பெற்று அவர்கள் தனிநாடும் அடைந்திருந்தால் இதேமாதிரிதான் செயற்பட்டிருப்பீர்களா? அப்படித்தான் செயல்பட்டிருப்பீர்கள் என்பதை உங்களின் 'நான் புலிகளை 100% எதிர்க்கிறேன். இலங்கை அரசை 200% எதிர்க்கிறேன்' என்ற கோசமும் வலுச்சேர்க்கிறது. எனெனில் 200% எதிர்ப்பைச் செய்வதாகச் சொன்ன அரசு அதிகாரம் செலுத்தும் நிலத்திலே இப்படி உங்களின் 'ஆதரவுத்தளம்' செயற்படும்போது, 100% எதிர்ப்பைக் காட்டிய புலிகள் வென்றிருந்தால் இன்னும் நிறைய ஆதரவு கொடுத்திருப்பீர்கள் என்பதே யதார்த்தமாகும். அப்படியாயின் புலிகள் செய்த எல்லாவற்றையும் மறந்து பகை மறப்பும் மீள் நல்லிணக்கமும் மக்களைக் காரணங்காட்டி செய்யச் சொல்லும் அ.மார்க்ஸ் போல நீங்களும் கூறுவீர்களா?

இப்போது சிங்களத் தேசியக்கொடிக்கு ஆதரவுக்கோசம் போடும் ஹரி ராசலட்சுமி அப்போது புலிக்கொடிக்கு போட்டிருப்பாரா (இக்கேள்விக்கு மட்டும் ஹரி பதில் சொல்லலாம்)



(8) பத்மநாப அய்யரை அவரின் பெயரில் 'அய்யர்' இருக்கின்றது என்ற ஒரு காரணத்தை வைத்தே நீங்கள் எல்லாம் செத்த பாம்புக்கு அடிப்பதுபோல அவரைச் சாடுனீர்கள் (இங்கே எனக்கு அய்யரோடு தனிப்பட்ட நெருங்கிய பரிட்சயம் என்ற முடிவுக்குவந்துவிடக்கூடாது). கனடாவுக்கு வந்த பலமுறைகளில் ஒரேயொரு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருக்கின்றேன்). நானறிந்தவரை அய்யர் தான் ஒரு பிரமாண சாதியில் பிறந்ததை முன்வைத்து எவரையும் ஒடுக்கியதாகவோ ஒதுக்கியதாகவோ கேள்விப்பட்டதில்லை. எவரும் அப்படி எழுதியும் வாசித்ததுமில்லை. நீங்கள் இவ்வளவு கிழித்தும் உங்கள் தொகுப்புக்கள்/படைப்புக்களை தானே வாங்கி அய்யர் தன் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதுவல்ல என் கேள்வி. நீங்கள் உங்கள் சத்தியக்கடதாசியில் ஹரி தனது முழுப்பெயருடன் எழுதிய மத்தியகல்லூரி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தீர்கள். ஹரிக்கும் அவரது பின்னால் வரக்கூடிய பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோலவே பத்மநாப அய்யரும் இருக்கின்றார். சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல? அய்யர் என்ற பெயர் இருப்பதால் மட்டுமே பத்மநாப அய்யரோடு தேவையில்லாமல் தனவிய நீங்கள் எப்படி ஹரியின் முழுப்பெயரோடு உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கச் செய்தீர்கள்? இதற்குப் பெயர் தான் நேர்மையா? அறமா?



(9) தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.





(10) நீங்கள் ரயாகரன், கலாமோகன் உட்பட யமுனா ராஜேந்திரன் வரை விடாது துரத்தி அவர்களை 'அம்பலத்தியிருக்கின்றீர்கள்'. ஆனால் இன்று சுகன் தான் கூறியவற்றுக்கு மாறாய் நடந்துகொண்டிருப்பதை (அண்மையில் பானுபாரதியும் தன் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கின்றார்) பார்த்துக்கொண்டிருந்தும் நீங்கள் ஏன் ஒரு கட்டுரை எழுதவில்லை (ஒரேயொரு கட்டுரை சுடப்படும் இளைஞர் பற்றிய சுகனின் புரட்டுக்கதையைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்) நான் கேட்பது சுகனின் கோட்பாடு/அரசியல் சரிவுகளை முன்வைத்து ஒரு கட்டுரை ஏன் இதுவரை எழுதவில்லை?



(11) அனைவருக்குமான திறந்த உரையாடல்கள் என்பது இணையத்தில் முக்கியமானது. நமது இயக்கங்கள் அனைத்தும் அவ்வாறில்லாததால் தம்மில் தாமே மண்ணை அள்ளிப்போட்டது மட்டுமில்லாது அவர்களை நம்பிய மக்கள் மீதும் மண்ணை அள்ளிப்போட்டார்கள். 'சனநாயக வெளி' பற்றி அக்கறையுள்ள நீங்கள் ஏன் பின்னூட்டங்களை தடுத்தீர்கள்? வளர்மதி தனது பின்னூட்டங்கள் தடுக்கப்பட்டதென்கிறார். ரஃபேலும் அதைக் குறிப்பிடுகின்றார். வேறு சிலரும் முன்னர் அவ்வாறு கூறியதாக நினைவு. பெயர்கள் சரியாக நினைவுமில்லை. நீங்கள் சத்தியக்கடதாசியிலிருந்து ஷோபாசக்தி டொட் கொம் ற்குப் போனபோதும் நீண்டகாலமாய் பின்னூட்டப்பகுதி மூடப்பட்டே இருந்தது. ஆக இதுவும் சனநாயக வெளி என்கின்றீர்களா? இப்போது பேஸ்புக்கிலும் அதைத் தொடர்கின்றீர்கள். உங்களைச் சீண்டுகின்றார்கள் என்பதற்காய் அவர்களை அகற்றுகின்றீர்கள். இணையம் போன்ற வெளியிலேயே எம்மால் சகிப்புத்தன்மையும், எல்லோரையும் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கும்போது, எங்களைப் போன்றவர்கள் சனங்களை முன்னிட்டு அரசியலோ அல்லது இலக்கியந்தான் பேசமுடியும் என நம்புகின்றீர்களா? சனத்தோடு புழங்கும் வெளியில் இதேபோன்ற் ஆட்கள் எரிச்சலூட்டும்போது கிடைக்கும் தும்புக்கட்டையாலோ அல்லது துவக்காலோ போடாமல் விடமாட்டோம் என்பது என்ன நிச்சயம்? ஆக இணையத்திலேயே சகிப்புத்தன்மை இல்லாத நாங்கள் சனங்களுக்கான அரசியலோ எதுவோ பேசுவதென்பது சுத்த பம்மாத்துதான் என்கின்றேன். ஆமா/இல்லையா என்பதை ஒற்றைவரியில்லாது விளக்கத்துடன் தரவும்.



(12) இக்கேள்வியை பொதுவெளியில் வைக்க விருப்பமில்லை (டிசே)



(13) சாதியம் குறித்து... நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டமாதிரி எங்களுக்கு ஓர் பெரியாரோ அம்பேத்காரோ அயோத்திதாசரோ நாராயணகுருவோ இல்லாதுபோனது சாபமே. ஆனால் இவர்களைப் போன்ற பலரும் இருந்துகூட இன்னமும் இந்தியாவில் சாதியம் வீரியமாகவே இருக்கின்றது. அண்மையில் கூட ஆதவன் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். புலிகளின் காலத்தில் சாதி ஒழிப்பு நடைபெறவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால் சாதி நாசூக்காய் மறைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் பொதுவெளியில் பலர் தம் சாதித்திமிரைக் காட்டத் தயக்கமிருந்தது. எனெனில் புலிகளால் தண்டனை கொடுக்கப்படுமென்று.

அண்மையில் தேவதாசன் பதிவுசெய்த விடீயோவில் கோயிலில் ஒரே இடத்தில் பொங்கிப்படைப்பதை தலித்துக்களும் இருக்கின்றார்கள் என்பதால் ஆதிக்க சாதி தனிக்கொட்டில் போட்டுப் பொங்க அதை உடைத்ததலித்துக்களை பொலிஸ் கைதுசெய்திருக்கின்றது. புலிகளிடம் இருக்கும் துவக்குப் பயத்தால் இவ்வாறு தனியே கொட்டில்போட்டுப் பொங்க ஆதிக்கசாதியினர் போயிருக்கமாட்டார்கள் என ஒருவர் ஒரு வாதத்தை வைக்கின்றார் என வைப்போம். அதாவது அவர் புலிகளின் காலத்தில் இருப்பதைவிட இப்போது சாதித்திமிரும் ஒடுக்குமுறைகளும் அதிகம் என முடிவுக்கு வருகிறார் என்றால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்? இப்போதைய சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எவ்வாறான போராட்டங்களை முன்வைப்பீர்கள்.?



(14) எதிர்காலத்தில் ஈழத்தில் முன்னால் புலிகள் ஒரு அரசியல் கட்சியாக பரிணாமித்து, தமிழ்ப்பிரதேசங்களில் முக்கிய கட்சியாக மாறுகின்றனர் என வைப்போம். அரசியலில் பலம் பெறுகின்ற அவர்கள் இலங்கை அரசிடமும், உலகிடமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியும் (விரும்பினால் பிரிந்துபோகின்ற உரிமையும் தரவேண்டுமென) ஒரு பொதுசன வாக்கெடுப்பைக் கேட்கின்றார்கள் என வைப்போம். அவ்வாக்கெடுப்பில் அங்குள்ள மக்கள் தனிநாட்டுக்கு ஆதரிக்கின்றார் என (சும்மா ஒரு ஆசைக்குத்தான்) வைப்போம். ஆனால் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிகிறது. தனிநாடு வந்தால் அது எப்படி முன்னர் புலிகளின் ஆட்சி இருந்ததோ அதே பிரின்சிப்பல்கள் பின்பற்றப்படுமென்று. நீங்கள் மக்களின் முடிவுக்கு தலைசாய்த்து புதிய நாட்டை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது புலிகளின் மிச்சங்கள் இன்னும் இருக்கின்றது என்பதற்காய் எதிர்ப்பீர்களா (இந்தக்கேள்விக்கு hint: இப்போது மக்களைக்காரணங்காட்டித்தான் எல்லா இடங்களிலும் ஓடி ஓடிக் கையெழுத்திடுகின்றீர்கள்...மக்களின் முன் மகிந்தா ஒரு பொருட்டாக இல்லாதபோது, அம்மக்களின் முடிவின் முன் புலிகளும் ஒரு பொருட்டில்லையென இந்த அப்பாவி மனம் நம்புகிறது)





இந்தக் கேள்விகள் வளர்மதியினதுடையது...

(நினைவூட்டல்...

Shoba Sakthi டீசே மேலதிக விளக்கத்திற்காக மறுபடியும் சொல்கிறேன். வளர்மதியின் கேள்விகள் நியாயம் என நீங்கள் கருதும் பட்சத்தில் அந்தக் கேள்விகளோடு உங்களிற்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் தயவு செய்து அநதக் கேள்விகளை வெறுமனே கட் அன்ட் பேஸ்ட் செய்து உங்களது கேள்விகளாக வையுங்கள். நான் கண்டிப்பாக பதில் சொல்வேன். பதில்களுக்கு மட்டுமல்ல கேள்விகள் கேட்பவருக்கும் பொறுப்புணர்வு தேவையென்பதாலேயே இந்தக் கோரிக்கை.

November 13, 2010 at 9:31pm )



1. ஒடுக்கப்பட்டோர் விடுதலை – குறிப்பாக, தலித் விடுதலை குறித்து ஒரு தலித் அல்லாத ஆதிக்க சாதியில் பிறந்த நபர் எந்த அளவில் நின்று பேசுவது? தலித்துகளுடைய பிரதிநிதி போலவும், அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டது போன்ற பாவனையோடும் பேசுவது சரியா? தமிழகத்தில் அ. மார்க்ஸ் இப்படிப் தலித் அரசியல் பேசிய காரணத்தினால்தானே ரவிக்குமார், ”எங்கள் அரசியலை – விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ நடையைக் கட்டு” என்று அ. மார்க்சை ஒதுக்கித் தள்ளினார்? புலம் பெயர் சூழலிலும் அதே போன்று தலித்துகளுடைய பிரதிநிதிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு அதே தவறை செய்வது சரியா?




2. அடையாள அரசியலை நிராகரிப்பதாகக் கூறிய உங்கள் தரப்பு அரசியல் அடையாள அரசியல்தானே செய்கிறது? இது உங்கள் கொள்கைக்கு முரணானதில்லையா?






3. பெரியாரின் தாசர்களாக தம்பட்டமடித்துக் கொள்ளும் நீங்கள் பெரியார் 1930 கள் முதல் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்தியது சாதிய ஒழிப்போடு கூடிய தமிழ் தேசிய விடுதலையைத் தவிர வேறு என்ன? இதை மறுக்கிறீர்களா ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுத்தால், விளக்க வேண்டும். ஏற்றால், முரண்பாட்டை விளக்க வேண்டும்.






4. இந்தப் பெருங்கதையாடல் என்கிறீர்களே, அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? உங்கள் விளக்கப்படியே பார்த்தால், இந்துத்துவத்துவ பெருங்கதையாடல் என்று சொல்ல முடியுமா?






5. வித்தியாசம் வித்தியாசம் என்கிறீர்களே வித்தியாசத்திற்கும் முரண்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்று சொல்ல முடியுமா?






6. பலஸ்தீனத்திலே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் நீங்கள், ஈழத்திற்கோ தமிழகத்திற்கோ அதை ஏன் நிராகரிக்கிறீர்கள்? பலஸ்தீனத்திலே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் கடும் மோதல்கள் இல்லையா? ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மட்டும் அக முரண்பாடுகளைச் சொல்லி விடுதலையை மறுப்பவர்கள், பலஸ்தீனத்திற்கு அதைச் சொல்லாமல் விடுவது ஏன்?




7. காஷ்மீரில் அகமுரண்கள் இல்லையா? அங்கே ‘துரோக’ அமைப்புகளால் எண்ணற்ற உயிர்பலிகள் நிகழவில்லையா? இன்றும் ஆயுதப் போராட்டத்தோடு சேர்த்த அமைதிப் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிலும், உலகிலேயே வலுமிக்க இராணுவங்களுள் ஒன்றை எதிர்த்தல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்? காஷ்மீர் விடுதலையை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?

Saturday, February 12, 2011

மாற்றை முன்வைத்தல்

எனக்கு ஷோபா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல 'தில்' இருக்கு, இதில் கையெழுத்திட்டு அனுப்ப ஷோபாவிற்கு 'தில்' இருக்கா?)

ஷோபாசக்தி இன்று வெளியிடப்படும் தம்முடைய உட்பட அனைத்து அறிக்கைகளைப் பற்றி எனது கருத்தைச் சொல்லச் சொன்னார். . ஷோபாவிற்கான பிற கேள்விகள் இருக்கின்றன.அது பிறகு.

இது டிசேயாகிய நான் எழுதிய ஓர் அறிக்கை. இதிலுள்ள விடயங்கள் (நான் அவசரத்தில் எழுதியது) திருத்தமாய் எழுதி, பிறவிடயங்கள்ச் சேர்ப்பதாயின் சேர்த்து, செம்மைப்படுத்தி ஷோபாசகதி உட்பட புலம்பெயர்ந்த நாம்  அனைவரும் கையெழுத்திட்டு புலம்பெயர் தேசத்திலிருந்து மாநாட்டுக்குப் போகின்ற ஒருவரிடம் 'சர்வதேச மாநாட்டில்' வாசிக்கச்சொல்லிக் கேட்போம். அதேபோன்று இலங்கையில் வெளிவரும் அனைத்து சிங்கள/தமிழ்/ஆங்கில பத்திரிகைகளுக்கும் அனுப்பிப் பிரசுரிக்கச் செய்வோம்)
........................................


நாம் 'சர்வதேச எழுத்தாளர் மாநாடு' நடத்துவதை  மிகவும் வரவேற்கின்றோம். இது தமிழர்/முஸ்லிம்கள்/சிங்களவர்/மலையகத்தமிழர் போன்றவ அனைவரும் கலந்துரையாடுவதற்கான முக்கிய கூடல் என்பதுடன்,  பெரும் போரின்பின் களைத்துப்போன மக்களை இயல்புநிலைக்கு வருவதற்கு உதவும் என்பதிலும் எமக்கு எவ்வித சந்தேகமுமில்லை. எனவே புலம்பெயர்ந்தவர்களாகிய நாம் இம்மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துவதுடன், எமது ஆதரவு உங்களுக்கு என்றும் இருக்கும் என்பதையும் உறுதி செய்கின்றோம்.

மேலும் "அரசியல் உண்மைகளைப் பேசுவதற்கு மாநாட்டில் தடையில்லை" என அறிவித்திருக்கும் மாநாட்டு அமைப்பாளர்களின் நிலைப்பாட்டையும் வரவேற்கும், அதேவேளை நாம் சிலவிடயங்களைப் பேசுவதற்கான அனுமதியை எங்களுக்குத் தருவீர்களென நம்புகின்றோம்

கடந்த வருடம் வரை நிகழ்ந்த போரினால் பொதுமக்களுக்கு நிறைய உயிர்ச்சேதம், அங்க இழப்புக்கள், சொத்து இழப்புக்கள் உட்பட பெரும் மன உளைச்சல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இப்போர் இரண்டு மிகப்பெரும் ஆயுத அமைப்புக்களான இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்டிருக்கின்றது என்பதை அனைவரும் அறிவர்.

(1) விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்தின்போது பிள்ளைகளைப் பலவந்தமாய்ச் சேர்த்தல், மக்களை வெளியேற விடாமல் தடுத்தமை, அவ்வாறு வெளியேறியவர்களை கடும் சித்திரவதைக்கு உட்படுத்தியது உட்பட பல இடங்களில் தமிழ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொன்றிருக்கின்றார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்கின்றோம். அதேவேளை இலங்கை இராணுவமும் வரலாறு காணாத பெரும் படுகொலைகளை நிகழ்த்தியிருக்கின்றது (அவற்றிற்கான ஆதாரங்களாய் விடீயோக்கள்/ புகைப்படங்கள்/வாக்குமூலங்களை முன்வைத்தல்). எனவே விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களைச் செய்திருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு ஒரு சுயாதீனமான -அரசோ/புலிகளோ சாராத குழு- விசாரணைகளை நடத்த நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

(2) புலிகள் ஒரு 'தீவிரவாத' இயக்கம் என சர்வதேச நாடுகள் பலவற்றால் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இராணுவத்தைக் கொண்டுள்ள இலங்கை அரசானது சனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒரு' தீவிரவாத' இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல்லாண்டுகளாய் மக்கள் இருந்தபோதும் மக்கள் இப்படிக் கொத்துக் கொத்துக் கொலை செய்யப்படவில்லை. ஆகவே, இறுதிப்போரில் புலிகளுக்கு ஏதேனும் அமாஷ்ய சகதி வந்து தாக்கி தம் மக்களைக் கொத்துக் கொத்தாய் கொண்டிருந்தாலே தவிர, இப்படி மக்கள் கொல்லப்பட்டிருக்கச் சாத்தியமாயிருக்காது. எனவே இறுதிப்போரின்போது கொல்லப்பட்ட மக்களும் அங்கங்களை இழந்தவர்களும் பல்லாயிரக்கணக்கில் இருப்பதால் இராணுவத்தின் பங்கு பெரும்பங்கிருக்கும் என்பதை நாம் அனைவரும் வலியுறுத்துகின்றோம்.

(3) இதேயேன் நாம் குறிப்பிடுகின்றோம் என்றால், புலிகள் ஒரு 'தீவிரவாத' அமைப்பு என்பதைச் 'சரவதேச'மே கூறியிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசு ஒரு ஜனநாயக அரசு. ஜனநாயக அரசானது தனது நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டியது ஓர் அடிப்படை அறம். ஆனால் இங்கே இறுதிப்போரின்போது இலங்கை அரசானது தமிழ்மக்களை தனது மக்களாக எந்தப்பொழுதிலும் ஏற்றுக்கொள்ள்வில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. ஒரு உதாரணத்திற்கு 'தீவிரவாதிகள்' மக்கள் கூட்டமுள்ள பஸ்ஸையோ அல்லது விமானத்தையோ பயணக்கைதியாக்கும்போது ஒரு சனநாயக அரசு தனது மக்களை விடுவிடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டும். முதலில் பேச்சுவார்த்தை நடத்தும், பிறகு தீவிரவாதிகளோடு சமரச முயற்சிகளில் ஈடுபடும். அவையும் இயலாதபட்சத்தில் வன்முறையால் மக்களைப் பாதிப்பின்றிக் காப்பாற்ற முயலும். எந்த ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் தீவிரவாதிகளைக் கொல்லவேண்டும் என்பதற்காய் முழுவிமானத்தையோ பஸ்ஸையோ மக்களுடன் சேர்த்து முற்றாகத் தாக்கி அழிப்பதில்லை. ஆனால் இலங்கை அரசானது தனது சொந்தமக்கள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிந்தும், இவ்வாறு மக்களை விடுவிக்க எந்த ஒரு முயற்சியும் செய்யாது முற்றுமுழுதாக தாக்குதல்களை தீவிரமாக்கிக் கொன்றிருக்கின்றார்கள். மக்களை ஒதுங்கச் சொன்ன பாதுக்காப்பு வலயங்கள் மீதும் மிலேச்சனத்தனமாய் தாக்கியிருக்கின்றார்கள். 'தீவிரவாதி'களான புலிகள் பாதுகாப்பு வலயங்களில் இருந்து தாக்கினார்கள் என்பதற்காய் அதைச் சொல்லி நியாயப்படுத்த முடியாது. 'தீவிரவாதி'கள் அதைத்தான் செய்வார்கள், இல்லாவிட்டால் நாம் ஏன் தீவிரவாதிகள் என அவர்களைச் சொல்ல வேண்டும். ஆக 'தீவிரவாதி'களான புலிகள் ஒளிந்திருந்ததால்தான் இப்படித் தாக்குதல் செய்தோம் என்று இலங்கை அரசு கூறுமாயின் இலங்கை அரசும் தீவிரவாத முறைகளைத்தான் பயன்படுத்தியிருக்கின்றது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவேண்டும்.

(4) ஆகவே மேற்கூறிய காரணங்களால் இராணுவமும் புலிகளைப் போன்று போர்க்குற்றஞ்களைப் புரிந்திருக்கின்றது. இந்த இராணுவத்தின் முப்படைத்தளபதியாக அதிவணக்கத்திற்குரிய மேன்மை தங்கிய மகிந்தா இராஜபக்சாவே இருக்கின்றார். ஆகவே அவரையே நாம் முதற் குற்றவாளியாக அடையாளங் காண்கின்றோம். அவரைச் சர்வதேச நீதிமன்றத்த்தின் முன்னிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.

(5) இன்று சரணடைந்த 10, 000 ற்கு மேற்பட்ட புலிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்வதை நாம் மிகவும் வரவேற்கின்றோம். அதே சமயம் சரணடைந்த புலிகளின் முக்கிய பொறுப்பானவர்கள் பற்றிய செய்திகள் எதையும் சனநாயக இலங்கை அரசானது போர்முடிந்து 1 வருடமாகியும் வெளிப்படையாகக் கதைக்கவில்லை. அவர்களைப் புலிகளின் போர்க்குற்றங்களுக்காய் தடுத்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கவும் செய்கின்றோம். அவர்கள்  அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதற்கு  ஒரு 'நியாயம்' இருப்பது போல, போர்குற்றங்களைச் செய்ய இராணுவ தளபதிகள், பிறர் எவ்வாறு ஒரு சனநாயக நாட்டில் சுதந்திரமாக நடமாட முடிகின்றது? என்ற கேள்வியை நாம் முன்வைக்கின்றோம்.

(6) போரின் பின்பாய் மக்கள் மீள குடியமர்த்தபடுவதை நாம் வரவேற்கும் அதேவேளை அவர்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான அடிப்படை வசதிகளையாவது இந்த சனநாயக அரசு செய்யவேண்டும். ஆனால் அரசானது புலம்பெயர் தமிழரிடம் உதவி செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுவதோடு அம்மக்கள் மீது அக்கறை கொள்ளாதிருக்கின்றது. இதே அரசானது பிற சிங்கள் பிரதேசங்களிலும் அபிவிருத்தி செய்யத்தான் செய்கின்றது. ஆனால் அவ்வாறான அபிவிருத்தி நிகழும்பொது 'புலம்பெயர் சிங்கள மக்களே' உதவுங்கள் என எந்த கோரிக்கையையும் வைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆக இதிலிருந்து தமிழ் மக்களை இலங்கை அரசானது தனது நாட்டின் மக்களாகக் கொள்ளாமல் இருக்கின்றது என்றோ அல்லது இரண்டாம்பட்சமாகக் கருதிக்கொள்கிறதோ என்கின்ற முடிவுக்கு நாம் வரமுடியுமா?

(7) இன்று வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியே நிகழ்கின்றது. இராணுவம் முற்றுகையிட்டிருக்கின்ற நகரங்கள் ஒருபோதும் இயல்புநிலைக்குத் திரும்புவதேயில்லை. எந்த ஒரு சனநாயக நாட்டிலும் இப்படி இராணுவம் அடர்த்தியாகச் சூழ்ந்திருப்பதில்லை. அவ்வாறிருந்தால் அவை ஒரு போர்ப்பிரதேசமாகவோ அன்றி இராணுவ ஆட்சியாகவோ இருக்கும். இன்று முற்றாக இலங்கையில் போர்சூழல் இல்லாத நிலையில் தமிழர் பிரதேசங்களில் இருந்து முற்றுமுழுதாக இராணுவம் அகற்றப்படவேண்டும் என்று கோருகின்றோம் ( நாம் சிங்களப் பிரதேசங்களுக்குப் போகும்போது இவ்வாறான இராணுவ முகாங்களையோ காப்பரண்களையோ, இராணுவீரர்களையோ பார்ப்பதில்லை என்பதை ஓர் உதாரணத்திற்குக் கூறுகின்றோம்)

(8) இன்று தமிழ்ப்பிரதேசங்களில் பலவந்தமான குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. புதிய புதிய புத்த விகாரைகள் எழும்பிக்கொண்டிருக்கின்றன. எந்த இன மக்களும் நாட்டின் எங்கு செல்லவும் எங்கேயும் வாழ்வதற்கான உரிமைகளை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் பலவந்தமான குடியேற்றங்கள் ஒருபோது இன நல்லிணக்கத்தைத் தரப்போவதில்லை. அவை இனங்களிடையே காழ்ப்புணர்வையே ஏற்படுத்தச் செய்யும். தமிழர்கள் ஆரம்பகாலப் போராட்டக்காரணிகளில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கின்றது. அன்றே அன்றைய அரசுக்கள் இது மீது கவனஞ்செலுத்தியிருந்தால் இவ்வகையான மிகப்பெரும் அழிவுகளுக்கு நாம் வந்திருக்கமுடியாது. ஏற்கனவே செய்த பிழையைத் திரும்பவும் செய்யும்போது இது ஒரு அரசின் அசமந்தப் போக்கு எனவே எடுத்துக்கொள்கின்றோம். தென்பகுதியில் தமிழ்மக்கள் உரிய வகையில் குடியேறியதைப் போல சிங்கள்மக்களோ பிறரோ குடியேறுவதை நாம் மிகவும் வரவேற்கின்றோம்.

(9) வடமாகாணத்திலிருந்து புலிகளால்  வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் உட்பட  80களில் வாழ்ந்த சிங்கள் மக்கள் வரை அனைவரும் திரும்பி வாழ்வதறகான் சூழலும் இந்தளவு கால இழப்புக்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்படவேண்டும் எனவும் எமது முக்கிய கோரிக்கையாக முன் செய்கின்றோம். மேலும் இன்றும் யாழ் வலி வடக்கில் பெரும்பாலான பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாய் (கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாய்) இருப்பதை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம். ஆனால் அரசானது இதில் பிடிவாதமாய் இருப்பதுடன் அண்மையில் கிழக்கில் சம்பூரைக் கூட  உயர் பாதுகாப்புப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியிருபதைக் கண்டிக்கின்றோம். ஏற்கனவே மேலே நாம் வலியுறுத்திக் கூறிய 'இயல்புவாழ்க்கைக்கு திரும்புவதற்கு இராணுவம் அகற்றப்படல் அவசியம்' என்பதை ஒரு அரசானது கவனத்தில் கொண்டால் இவ்வாறான உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு தேவையேயிருக்காது. ஒரு சனநாயக நாட்டில் அரசோ இராணுவமோ மக்களுக்குரியதானதே. அவர்களின் வரிகளின் மூலமே இவ்வகையான அமைப்புக்கள் இயங்குகின்றன என்பதை நாம் நினைவுபடுத்துகின்றோம்.

(10) இன்று இலங்கையில் ஊடகங்களுக்கான சுதந்திரம் இல்லை என்ற குரல்கள் பல மட்டங்களிலிருந்து எழுகின்றன (கொல்லப்பட்டவர்கள் / காணாமற்போனார்/ அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின்  பெயர்களை இங்கே பட்டியலிடுதல்). ஒரு சனநாயக நாட்டில் பத்திரிகை சுதந்திரத்துடன் இயங்குதல் இன்றியமையாதது. முக்கியமாய் ஒரு அரசு எவ்வாறு இயங்குகின்றது, எந்தத்திசையில் போகின்றது என்பதை மதிப்பீடு செய்வதை ஊடகத்துறை தவிர்ந்த வேறு எந்தத்துறையாலும் செய்யமுடியாது. ஆனால் இலங்கையில் தாம் விரும்பியதை எழுத ஊடகங்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோ முடிவதில்லை. சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் பங்குபெறும் புலம்பெயர் தேசத்தவர்களாகி நாம், எங்களுக்கு புலம்பெயர்ந்த நாடுகளில் பேசுவதற்கு/எழுதுவதற்கு/கருத்தாடல் செய்வதற்கு இருக்கும் சுதந்திரம் போன்று அனைத்தும் இலங்கைப் படைப்பாளிகளுக்கும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம். நாம் எமது கருத்து எதுவாயினும் எழுதிவிட்டு தெருவில் எந்த நேரத்திலும் கொல்லப்படமாட்டோம் என்று அச்சமின்றி நடமாடுவதைப் போல இலங்கையில் ஓர் சூழல் உருவாக வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த அறிக்கையை சர்வதேச மாநாட்டில் வாசிக்க, ஷோபாவுடன் அறிக்கை தயாரித்த இராகவனே பொருத்தமான நபர் என நினைக்கின்றேன். ஷோபாவையே அனுப்பிப் பேசச்சொல்லலாம். அவருக்கு விஸா பிரச்சினை இருக்கும். இராகவன் ஏற்கனவே 2 முறை  இலங்கை போய்விட்டார். எனவே அவருக்குப் பிரச்சினை இருக்காது. மற்றது  எமது பிரசினை பற்றிய அதிக அறிந்தவரும் அனுபவத்தில் கூடியவரும் கூட.

இதை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் நாம் மட்டுமே செய்வோம். தமிழக நண்பர்களும் வேண்டாம். முக்கியமாய் ஈழத்தில் இருப்பவர்கள் எவரும் கையெழுத்திட கேட்கவேண்டாம். அவர்களது பாதுகாப்பு உயிர்வாழ்தலே நமக்கு முக்கியம்.

இதில் நாம் லெ.முருகபூபதி, நோயல் நடேசன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பத்மநாப ஜயர், காலம் செல்வம், தேவதாசன், ஸ்ராலின், ஷோபாச்கதி, ராகவன் போன்றவர்களை முக்கியமாய் உள்ளடக்கவேண்டும். எனெனில் இவர்களே அறிக்கைப் போர்கள் நடத்திக்கொண்டிருப்பவர்கள்)

ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்

(ஃபேஸ்புக்கில் பெரிய பின்னூட்டமானாதால் சில பகுதிகள் தவறியும் மாறியும் வந்தன. எனவே சேகரத்திற்காய்)

கேள்வி கேட்கத் தெரிந்த மனமே, உனக்கு கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாதா?" எனப் பாடிக்கொண்டு கீழே எழுதுவதை வாசிக்கவும்(இதை 'நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா' என்ற பாடலின் 'பண்'னில் பாடினால் இன்னும் நன்று)
-----------------------------------------------------------------------
ஷோபா,நீங்கள் ஊரில் உயரம் பாய்தல், நீளம் பாய்தல் போன்றவற்றில் விண்ணராய் இருந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம் (நீங்கள் சொல்லாடல்/நீட்ஷே/ ஆறுமுகம் எனப் 'பாராட்டும்போது' திரும்பி நானும் 'ஜஸ்' வைக்காவிட்டால் தமிழ் மரபுக்கு முரணாகி விடுமல்லவா?). எனென்றால் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காது அப்படியே எட்டி எட்டிப் பாய்ந்து விடுகின்றீர்கள். சரி அதற்காக நானும் எட்டிப் பாய்வதா? கொஞ்சம் பொறுங்கள் வரலாற்றை மீளக்கொண்டுவருகின்றேன். அதற்கு முன்...
.........................
1.
இலங்கையில் நடக்கும் மாநாடு குறித்து நேற்றும் ஒரு நண்பரோடு கதைத்ததையே மீண்டும் எழுதுகின்றேன். இம்மாநாடு குறித்து 'ஏன் நடத்தவேண்டும்?' என்று சொல்வதற்கும் 'ஏன் நடத்தக்கூடாது?' என்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன. அதை ஒரே அறிக்கையில் இரண்டு கேள்விகளையும் முன்வைத்து நாங்கள் எழுதவேண்டும் என்று கூறியிருந்தேன். காலம் கனிந்தால் அது ஓர் 'அரி'க்'கை'யாகக் கூட மாறக்கூடும். யாருக்குத் தெரியும்.

உண்மையில் இன்று இரண்டு பக்கத்திலும் வரும் அறிக்கைகளும் தங்களது வாதத்திற்கு வலுவான் 'உண்மை'யைப் பேசுகின்றன தவிர, எல்லாப் பக்கத்தையும் 'உண்மை'களையும் பேசவில்லை எனபதே சோகமானது. அதாவது அவரவர் தங்களுக்கு பாதுகாப்பான களத்திலிருந்து தற்காப்பு ஆட்டம் ஆடுகின்றார்கள். இந்த முரண்களிலிருந்து இன்னும் பல இருக்கின்றது.  இம்மாநாடு குறித்து பொதுவில் எழுதவில்லையே தவிர என் நட்பு வட்டத்தில் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டிருக்கின்றேன். எல்லாவற்றையும் எழுதவேண்டும் என்ற கட்டாயமா என்ன?

2.
/அறிக்கை அரசியலில் உடன்பாடில்லை/ என  எழுதியது இப்போது வெளிவிடப்படும் அறிக்கை அனைத்தும் உண்மையான நிலவரங்களைக் கதைப்பதில்லை, அது சார்ந்த/எதிர்க்கும் குழுக்களின் அரசியலை மட்டுமே முன்வைக்கின்றன. எனவே இந்த அறிக்கைகளின் பின்னாலுள்ள அரசியலில் தான் உடன்பாடில்லையே தவிர அறிக்கைகளை வெளியிடுவதில் உடன்பாடில்லை எனச் சொல்ல வரவில்லை. வரும் வெள்ளி நடக்கும் கூட்டத்திலும் நாங்கள் அறிக்கை ஒன்றுதான் சமர்பிக்க உள்ளோம். அறிக்கை உடன்பாட்டிலை எனச் சொன்னால் அது முரணாய் அல்லவா இருக்கிறது.

இப்போதுதான் உங்கள் தேங்கிப் போன அரசியலில் இருந்து வெளியே வாருங்கள் எழுதினேன். திருப்பியும் 'பிஸ்ரலா'?  பிஸ்ரலா வேண்டாம் வேண்டாமெனச் சனம் திருப்பிப் போனாலும், ச்சீய் இந்தா பிடியெனக் கொடுக்காமல் விடமாட்டியள் போல. மாறுங்களப்பு, எத்தனை காலந்தான் ஒரே க்ளிஷேயைச் சொல்லிக் கொண்டிருக்கப்போகின்றீர்கள்.

3.
என்னுடிய 'சிறப்பான' கருத்தை நாடு கடந்த அரசுக்கு அனுப்பக் கஷ்டப்படவேண்டாம். நான் கேட்ட கேள்வி நேரடியாக உங்களிடம். அதற்கு முதல் 'தில்' இருந்தால் பதில் அளியுங்கள்.

மேலும் நாடு கடந்த அரசின் உருத்திரகுமாரன் பக்கத்தில் இருக்கின்றார். நானே அனுப்பிக் கொள்கின்றேன். வேண்டுமென்றால் எதுவும் நெடியவனிடம் அனுப்புவதாய் இருந்தால் உங்களுக்கு அனுப்பிவிடுகின்றேன். நீங்கள் அவருக்கு அனுப்பி விடுங்கள். ஆனால் அதையும் பிறகு 'கொரில்லா' வில் வந்த றொக்கிராஜ் தலைவருக்கு அனுப்புவதற்கு எழுதிப்போட்டு பொக்கற்றுக்குள் வைத்து படங்காட்டியது மாதிரித் திரியக்கூடாது. ஓமோம். இப்பவே சொல்லிப் போட்டன்.

மற்றது, உங்களின் ஸ்ரையிலே ஒரு ஸ்டேட்மெண்டையும் எதிர்க்கால நன்மைக்காய் இப்போதே விடுகின்றேன். 'நான் ஷோபாசக்தியின் அரசியலை 100% எதிர்க்கின்றேன். ஆனால் நாடு கடந்த அரசின் அரசியலை 200% எதிர்க்கின்றேன்'.

4.
ஷோபா உங்களோடு இருக்கும் பிரச்சினை இதுதான். நீங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாது திருப்ப 'முட்டையில் மயிர் பிடுங்குகின்ற' மாதிரி கேள்வி கேட்பது. கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு இருக்கும் தார்மீக உரிமையைப் போல பதில் சொல்வதற்கான தார்மீக உரிமையும் இருக்கின்றது என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இனி இதற்கான சில உதாரணங்கள்.- கற்சுறாவும் நாகார்ஜூனனும் ஒரு கட்டுரையில் பின்னூட்டம் இட்டவுடன், நீங்கள் ரூவீற்றரில் 'நண்பர்களே கற்சுறாவும் நாகார்ஜூனனும் முக்கியாமான பின்னூட்டங்களை இட்டிருக்கின்றார்கள், அவசியம் வாசிக்கவேண்டும்' என்று அறிவிப்பு விட்டிருந்தீர்கள். ஆனால் அதே கற்சுறா நீங்கள் வெகுசன் இதழில் எழுதுவது பற்றிச் சொன்ன கருத்தை எழுதியபோது 'நண்பர்களே, நான் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்ததை கற்சுறா அம்பலப்படுத்தியிருக்கின்றார்' வந்து பாருங்கள்' என எழுதமாட்டீர்கள். ஏன் கற்சுறாவின் நியாயமான கேள்வியை மவுனமாகக் கடந்து போகின்றீர்கள்? இது கள்ள மவுனமில்லையா ஷோபா? உங்களுக்கு பாதுகாப்பாய்/சார்ப்பாய் இருக்கும் கேள்விகளை எதிரிகொள்ளும் நீங்கள் மற்றவற்றை ஒதுக்குவதை எந்த அறத்தின்பால் நியாயப்படுத்துவீர்கள்?

தேடகம் வைத்த 'தேசிய இனப்பிரச்சினைக்கான...' கருத்தரங்கில் நாடு கடந்த அரசின் பிரதிநிதியிடம் கேள்விகள் கேட்கக் கேட்க -இப்படித்தான் நீங்கள் முழுப்பூசணிக்காயை மறைத்தது மாதிரி- எட்டி எட்டிப் பாய்ந்து வேறு தோ ஏதோ எல்லாம் பதில் சொன்னார். ஏற்கனவே என்னுடைய 'சிறந்த கருத்தை' நாடு கடந்த அரசுக்கு அனுப்பப் போகின்றேன் என்றும் கூறியிருந்தீர்கள். எனக்கென்னவோ நீங்களும் நாடு கடந்த அரசிடம் இந்த விடயத்தில் எதுவும் ரெயினிங் எடுத்தியளோ என்ற சந்தேகமாய் இருக்கிறது.

- வளர்மதி உங்களுக்கு இளங்கோவன் அன்பன் என்பவரின் பகுதியில் ஜந்தோ பத்துக் கேள்விகள் கேட்டிருந்தார். அவை முக்கியமான கருத்தியல் கேள்விகள். அதற்கான உங்கள் பதில் சுயவிமர்சன்மாகவும் உங்களை முன்னகர்த்திச் கொள்வதாகவும் இருந்திருக்கும். 'மாற்று அரசியலை' ஒருகாலத்தில் நம்பிக்கையோடு பார்த்துப் பின் சலித்துபோன எங்களுக்கும் கூட உதவியிருக்கும். சரி வளர்மதியோடுதான் 'ஆற்றைப் பார்த்துக் கோபம்' என்றிருந்தால் கூட, வேறு யாரோ திருப்பிப் போட்டு பதில் அளிக்கச் சொல்லியிருந்தார்களே. அப்போதும் மவுனந்தானா?

- ஆனால் பெரும் முரண் என்றால், வளர்மதியின் கேள்விகளைச் சாமர்த்தியமாய் மறைத்துவிட்டு இப்போது அருள் எழிலனிடம் 'ஆயிரம் கேள்விகள் என்றாலும் கேள் பதில் சொல்கிறேன்' என மார் தட்டுகின்றீர்கள். இஃது எவ்வளவு அபத்தமானது என்று எப்போதாவது எண்ணிக்கொண்டீர்களா?

இப்படி ஃபேஸ்புக்கில் நீங்கள் முரணாக நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தும் உங்களின் நண்பர்கள் என்பவர்கள் எதுவும் உங்களிடம் சொல்லவில்லையே என்று குறித்துத்தான் கவலைப்படுகின்றேன்.

(எனக்குத் தெரியும் இதற்கும் நீங்கள் வெட்டி ஒட்டிக் கேள்வி கேட்பீர்கள் என்று. பரவாயில்லை. ஆனால் எனக்கு உடனே பதில் சொல்ல முடியுமோ தெரியவில்லை. அவ்வாறு எதுவும் எழுதாவிட்டால் 'காணாமற்போய்விட்டான்/ தலைமறைவாகிவிட்டான்' என யமுனாவிற்குச் செய்ததைப் போல மட்டும் செய்துவிடாதீர்கள், நேரம் வாய்க்கும்போது அதற்கும் பதில் சொல்வேன்)